Friday, 11 July 2014

வாடிக்கையாளர் கவனத்துக்கு...நுகர்வோர் நீதிமன்றம்



 புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தின் குளிர்பான பாட்டிலில் பல்லி, கரப்பான் பூச்சி, ஆணிகள் இருப்பதாக அவ்வப்போது செய்திகளில் படிக்கிறோம்.  இதெல்லாம் ஒரு துளிதான். மற்றபடி நாள்தோறும் வெவ்வேறு விதங்களில் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சின்ன நிறுவனம் முதல் பெரிய  நிறுவனங்கள் வரை கஸ்டமரை ஏமாற்றவே செய்கின்றன. இதையெல்லாம் எதிர்த்து என்ன செய்ய வேண்டும்? நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பை  எப்படி ஈடுகட்டுவது?


‘‘நுகர்வோர் நீதிமன்றம் மூலம் இதற்கெல்லாம் நஷ்டஈடு பெற முடியும். இதற்காகவே நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்கள் இயங்கி வருகின்றன. சுய உபயோகத்திற்காக பொருட்கள் வாங்குபவர்கள் மற்றும் சேவையை பெறுபவர்கள் நுகர்வோராக கருதப்படுவார்கள். ஆனால், இதனை வியாபார  நோக்கில் வாங்குபவர்கள் நுகர்வோர்களாக மாட்டார்கள். அதாவது, ஒரு பொருளை விற்பனையாளரிடம் இருந்து நேரடியாக வாங்கி தன் சொந்த  உபயோகத்திற்காக மட்டுமே பயன்படுத்துபவர் நுகர்வோர்.

அதே பொருளை ஒருவர் பெற்று அவரிடம் இருந்து மற்றவர் வாங்கிக் கொள்கிறார் என்றால் அவர் நுகர்வோராக கருதப்பட மாட்டார். மருத்துவம்,  உணவு மற்றும் எந்த விதமான சேவைகளை பெறுபவர்களும் நுகர்வோர் பட்டியலில் இடம் பெறுவார்கள். இவ்வாறு பெறப்படும் பொருட்களிலோ  அல்லது சேவையிலோ குறைபாடு இருந்தால், அதற்காக நஷ்டஈடை பெற்றுத் தருவதுதான் நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் வேலை.  பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக நுகர்வோர் குறைதீர் மன்றங்களை அணுகி புகாரை தாக்கல் செய்யலாம்’’ 

இவரைத் தொடர்ந்தார் நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் மோகன் தாஸ். ‘‘இந்த நுகர்வோர் குறை தீர் மன்றம் இந்தியாவில் மாவட்டம்,  மாநிலம் மற்றும் தேசிய குழு என மூன்று நிலையில் செயல்படுகிறது. நுகர்வோருக்கு ஏற்பட்ட நஷ்டம், ரூபாய் 20 லட்சத்துக்குள் என்றால் மாவட்ட  நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுக வேண்டும். 20 லட்சம் முதல் ஒரு கோடி வரை இழப்பீடு பெற வேண்டும் என்றால் அவர்கள் மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுக வேண்டும். ஒரு கோடிக்கு மேல் என்றால் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுக வேண்டும்.



அதே போல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் மேல் முறையீடுகளுக்கு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தையும்; மாநில நுகர்வோர்  குறைதீர் ஆணையத்தின் மேல் முறையீடுகளுக்கு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தையும் அணுகலாம். தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்  வழங்கும் உத்தரவுகளின் மேல் முறையீடுகளுக்கு உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும்  பொருந்தும். தனியார் துறை, பொதுத்துறை, கூட்டுறவுத்துறை போன்றவைகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.

இந்த சட்டம் நுகர்வோரின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, அவர்களின் உரிமைக்காகவும் வகுக்கப்பட்டுள்ளது.

உடலுக்கும், உடமைக்கும் தீங்கு விளைகின்ற வகையில் வணிக நோக்கில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளிடமிருந்து நுகர்வோர் தங்களை  பாதுகாத்துக்கொள்ளும் உரிமை.

மலிவு அல்லது போட்டி விலைகளில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த நம்பகத் தன்மையை நுகர்வோருக்கு  உறுதிப்படுத்தும் உரிமை.

மலிவான சலுகை விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களினால் இழுக்கப்பட்டு, அதன் பலனை வணிக நிறுவனம் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டதை  தெரிவிக்கும் உரிமை.

நுகர்வோரின் குறைகளைக் கேட்பதற்கும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் உத்தரவாதம் பெறும் உரிமை.

நேர்மையற்ற வணிகத் தொழிலினால் அல்லது மனச்சாட்சியற்ற சுரண்டல்களினால் ஏற்பட்ட பாதிப்பினால் நுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தை  நாடும் உரிமை.

நுகர்வோருக்கான விழிப்புணர்வினைப் பெறும் உரிமை. நுகர்வோரின் சச்சரவுகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் தீர்வு பெறும் உரிமை.


இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சரி, இதை எப்படி பெற வேண்டும்?

பொருட்களில் உள்ள தரக்குறைப்பாடு மற்றும் சேவையில் குறைப்பாட்டை கண்டறிந்தவுடன், அதற்கான சரியான ஆவணத்துடன் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி புகாராக பதிவு செய்ய வேண்டும். இப்படி செய்தால்தான் தரமற்ற பொருள் என்று நிரூபிக்க முடியும். எனவே, எந்த ஒரு பொருளை  வாங்கினாலும், முறையாக அதற்கான பில்லை பெறுவது அவசியம்.

புகார்களை தாக்கல் செய்யும் போது, கோரப்படும் நஷ்டஈடு தொகைக்கான போஸ்டல் ஆர்டர் அல்லது டி.டிக்கான தொகையை செலுத்த வேண்டும். அந்தியோத்தியா அட்டை உள்ளவர்கள் ஒரு லட்சத்துக்குள் நஷ்ட ஈடு கேட்பதாக இருந்தால் எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டாம்.  இந்த அட்டை இல்லாதவர்கள், ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை தொகை கேட்பதாக இருந்தால் அவர்கள் ரூ.200 செலுத்த வேண்டும். 5 லட்சம்  முதல் 10 லட்சம் என்றால் ரூ.500ம், 20 லட்சம் முதல் 50 லட்சம் வரை என்றால் ரூ.4000ம், ஒரு கோடிக்கு மேல் என்றால் ரூ.5000ம் கட்டணம்  செலுத்தவேண்டும்.

வாங்கிய பொருளில் குறைபாடும், சேவையில் குறைபாடும் இருந்தால், பொருட்களை பெற்ற நாட்களில் இருந்து இரண்டு ஆண்டுக்குள் புகார் மனுவை  தாக்கல் செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுக்குள் செலுத்த முடியவில்லை என்றால், மனு தாக்கல் செய்யும் போது தாமதத்துக்கான காரணத்தை  குறிப்பிட வேண்டும். பொருட்களை எம்.ஆர்.பி. விலையில் இருந்து அதிகமாக விற்கக்கூடாது. இதற்கு அன்ஃபேர் டிரேட் பிராக்டிஸ் என்று பெயர். இன்னொரு விஷயம், சேவை என்று வரும் போது அது மருத்துவ சேவை மட்டுமல்ல... அழகு குறித்த சேவையாகவும் அது இருக்கலாம்.

உதாரணமாக ஒரு விமான பனிப்பெண் தலை முடி உதிர்வதற்கான சிகிச்சை எடுத்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த சிகிச்சை மூலம் முடி  வளரவில்லை. இருந்த தலைமுடியும் கொட்டி விட்டது. இதற்காக அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் பதிவு செய்து நஷ்டஈடு பெற்றார். அதே  போல் மருத்துவ துறையில் தவறாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவரின் அலட்சிய போக்குக்காகவும் நுகர்வோர் நீதிமன்றத்தை  அணுகலாம்...’’

Thursday, 10 July 2014

சட்டம் உன் கையில்:சிறார்களுக்கான நீதி





பொதுவாக சட்டத்தின் முன் குற்றவாளி களாக நிற்கும் சிறார்களையும், பெற்றோர், காப்பாளர்களால் கைவிடப்பட்டோ, வேறு சூழ்நிலையால் ஆதரவற்று தங்களைத் தாங்களே பராமரிக்கவோ, பாதுகாக்கவோ இயலாத குழந்தைகளையும் எவ்வாறு கையாளுவது, பாதுகாப்பு கொடுப்பது, அவர்களின் வாழ்வை வளப்படுத்துவது என்பதை விளம்புகிறது இந்தச் சட்டம்!
 


இந்திய அரசியல் அமைப்பு சாசனம், அதன் பல்வேறு ஷரத்துகளில் குழந்தைகளின் தேவை மற்றும் அதன் அடிப்படை உரிமைகளை போற்றவும் பாதுகாக்கவும் பல அம்சங்களை வரையறுத்துள்ளது. ஐ.நா. சபையின் பொதுக்குழு 1989ம் ஆண்டு குழந்தைகள் நலன் காக்க மாநாடு கூடியது. அம்மாநாட்டுத் தீர்மானங்களை, இந்தியா 1992 டிசம்பர் 11 அன்று கையொப்பமிட்டு ஏற்றுள்ளது. நடைமுறையில் இருக்கும் பல்வேறு சட்டங்களும் விதிமுறைகளும் வயது வந்தோரின் பார்வையிலும் அவரின் நலனுக்காகவும் இயற்றப்பட்டுள்ளதாலும், அவை குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பொருந்தாத ஒன்றாக இருப்பதாலும், இவர்களுக்கான தனிச் சட்டத்துக்கான தேவை எழுந்ததால், அதை இயற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் அடிப்படையில் 2000ம் ஆண்டு மேற்கூறிய சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இச்சட்டம், 2006ல் போதிய திருத்தம் செய்யப்பட்டு, இன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.

*இந்தச் சட்டம் வயது நிரம்பாத ஆணையும் பெண்ணையும் சிறார்களாக வகைப்படுத்திஉள்ளது.

*
இந்தியா கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ள ஐ.நா. பொதுக்குழுவின் பரிந்துரைகளுக்கு உள்பட்டு இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

*
சிறார் குற்றவாளிகளை கையாள பயிற்சி கொடுக்கப்பட்ட, மனிதாபிமானமிக்க காவல் அதிகாரிகளை நியமிக்க வழிவகை செய்கிறது. 4காவல்துறையினரால் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் குற்றம் சாட்டப்பட்ட சிறார் குற்றவாளிகள் 24 மணி நேரத்துக்குள் குழந்தைகள் நல வாரியத்தின் முன் அல்லது சிறார் நீதிமன்றத்தின் முன் ஒப்படைக்கப்பட வேண்டும்.

*
குற்றம் இழைத்த சிறார் குற்றவாளிகள் காவல்துறையின் கண்காணிப்புக்கு வந்தவுடன் அவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

*
இந்தச் சட்டத்தின் கீழ் சிறார் குற்றவாளிகளை விசாரிக்க தனி அமைப்பு, குழந்தைகள் நல வாரியம், குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*
பராமரிக்க பெற்றவர்களோ, மற்றவர்களோ இல்லாத குழந்தைகளை நிரந்தரமாக தத்துக் கொடுக்கவும், தற்காலிகமான பாதுகாப்பில் விடவும், அவர்களுக்கு ஏற்படும் செலவினங்களை உபயதாரர் மூலம் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*
சிறார் குற்றவாளிகளின் நலன் கருதி அவர்களுடைய பெயர், விலாசம், பள்ளி முகவரி மற்றும் ஏனைய விவரங்களை வெளியிடாமல் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

*
குற்றம் சாட்டப்பட்ட சிறார் குற்றவாளிகள் வழக்குவிசாரணை முடிவடையும் முன்னர் 18 வயது பூர்த்தியாகும் பட்சத்திலும் அவர்கள் சிறார் குற்றவாளிகளாகவே விசாரிக்கப்படுவார்கள்.

*
ஒரு சிறார் குற்றவாளியையும் வயது வந்த குற்றவாளியையும் ஒன்றாக விசாரிக்க இந்தச் சட்டம் தடை விதித்துள்ளது.

*
பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் அல்லது தப்பித்து செல்லும் சிறார் குற்றவாளிகள் மீண்டும் காவல் துறையினரிடமோ, வேறு யாரிடமோ பிடிபடும்போது அவர்கள் தப்பி சென்றதற்கான தண்டனை எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.